நாமக்கல்லில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி: அமைச்சர்கள் பங்கேற்பு

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணியை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தொடங்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்த பேரணியை மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.

பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி அமைக்கப்பட்ட உணவு கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை, அம்மா உடற்பயிற்சி மையம், புதுப்பிக்கப்பட்ட வேளாண் கூட்டுறவு வங்கி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர், தங்கமணி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் நல்ல லாபத்துடன் இயங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

Exit mobile version