சிலம்ப போட்டியில் பங்கேற்க ரூ.1.20 லட்சம் வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உலக அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க வசதி இல்லாமல் தவித்து வந்த, சிவகாசியை சேர்ந்த மாணவர்களுக்கு, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவித் தொகை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர், அப்பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம், வால் வீச்சு, சுருள் சுழற்றுதல் உள்ளிட்ட கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் வியட்நாமில் நடந்த தெற்காசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று, 2 தங்கம் உள்பட 5 பதக்கங்களை வென்று பெருமை சேர்ந்தனர். இதனையடுத்து மலேசியாவில் நடைபெறவிருக்கும் உலக சிலம்ப போட்டிக்கு சிவகாசியைச் சேர்ந்த 9 பேர் தகுதி பெற்ற நிலையில், பொருளாதார வசதியின்மை காரணமாக மாணவர்கள் பங்கேற்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், பால் வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, மாணவர்கள் போட்டியில் பங்கேற்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கினார். வெற்றியுடன் தாயகம் திரும்ப வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version