அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பகுதியில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்,  கம்மாபட்டி, தெற்கு இழந்தைகுளம், ராஜா புதுக்குடி, சன்னதி புதுக்குடி, ஆத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது, மேளதாளத்துடன் ஒயிலாட்டம் ஆடி அமைச்சருக்கு, பொதுமக்கள், சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி கயத்தார் உள்ளிட்ட கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மார்ச் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார். இது போன்ற மக்கள் திட்டங்களை ஆளும் கட்சியால் மட்டுமே தர முடியும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version