புயல் சீரமைப்பு பணியின்போது உயிரிழப்பு – மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

கடந்த 20-ம் தேதி புதுக்கோட்டை அடுத்த கீரனூர் என்னும் இடத்தில் மின் கம்பிகளை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின்சார வாரிய ஊழியர் முருகேசன் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து முருகேசனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 15 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மானுவகாட்டுபாளையத்திற்கு சென்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, முருகேசனின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் முதற்கட்டமாக நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர் வழங்கினார்.

Exit mobile version