தமிழக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

தமிழக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கொடைக்கானலுக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொலை செய்யபோவதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புக் கொண்ட மர்ம நபர் தெரிவித்துள்ளார். உடனடியாக உஷாரான காவல்துறையினர், தொலைப்பேசி அழைப்பு குறித்து விசாரித்தனர்.

அப்போது தொலைப்பேசியில் பேசியது, வத்தலக்குண்டு அடுத்த விராலிபட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் குருசங்கர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், திருப்பூர் அடுத்த கள்ளிமந்தயம் பகுதியில் வைத்து குருசங்கரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தந்தையை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாக கூறப்படுக்கிறது. இருப்பினும் வேறு ஏதேனும் சதி செயல் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version