வறட்சியை எதிர்கொண்டு, வளர்ச்சியை கொண்டு வந்தது அதிமுக அரசு தான் – முதலமைச்சர் பெருமிதம்

தேர்தல் போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் வரலாற்றில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுகதான் என பெருமிதம் தெரிவித்தார். அதிமுகவின் சிறப்பான ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாக கூறினார்.

தொண்டருக்கும் மதிப்பு கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சில கட்சிகளில் வாரிசு அரசியல் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கும், திறமையாக உழைப்பவர்களுக்கும் பதவி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியது, அதிமுக அரசுதான் என்று பெருமிதம் தெரிவித்தார். 2011-ல் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 32.9 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது 49 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தியாவிலேயே துறை வாரியாக அதிக தேசிய விருதுகளை குவித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதை குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வறட்சியை எதிர்கொண்டு, வளர்ச்சியை கொண்டு வந்தது அதிமுக அரசு தான் என பெருமைப்பட கூறினார். மேலும், இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்று குறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் சுற்றி சுற்றி வந்து பொய் சொல்வார் என்றும் மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தேர்தல் போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முழக்கமிட்டார். இந்தியாவில் அடிமட்ட தொண்டரை கூட முதலமைச்சராக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என்ற முதலமைச்சர், இன்று எடப்பாடி பழனிசாமி, நாளை ஓ.பன்னீர்செல்வம், அதன்பின்னர் மற்றொரு தொண்டர் கூட முதலமைச்சராகலாம் என குறிப்பிட்டார்.

Exit mobile version