ட்விட்டரில் முதலமைச்சரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவரை பின்த் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக கொரோனா காலத்தில், ட்விட்டரில் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கை மீது, அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண்கிறார். இதனால் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை ட்விட்டர் மூலமாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகிவரும் கோரிக்கையை ஏற்று, ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல, அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு வருகிறார். இதன் மூலமாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி முதலமைச்சரின் ட்விட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

Exit mobile version