உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பயிற்சி, தேசிய தகவலியல் மைய முதுநிலை இயக்குநர் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிலையத்தில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் இருந்து தலா 2 பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின்போது, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்பிற்கும் ஒரு வார காலத்தில் பயிற்சி வழங்கிடவும், பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தேசிய தகவலியல் மைய முதுநிலை இயக்குநர் ஜெயபாலன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை சேர்ந்த விஜயராமன் பயிற்சிகளை வழங்கினர்.

Exit mobile version