காவல் உதவி ஆய்வாளர் மகள் திருமண விழாவில் 50 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் காவல் உதவி ஆய்வாளரின் மகள் திருமண நிகழ்ச்சியில் 50 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா நகரை அடுத்த, பாடிபுதுநகரை சேர்ந்தவர் தங்கச்சாமி. இவர் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரதிபா பிரியதர்சினிக்கும், அய்யப்பந்தாங்களை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு பூந்தமல்லி, குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

அப்போது, மணப்பெண் அறையின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் மண்டபத்தில் இருந்த பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணப்பெண் அறையில் சோதனை செய்த போது மேசையின் கீழ் 45 சவரன் வரை நகை இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு மேற்கொண்ட போது, இரண்டு பேர் மணப்பெண் அறையில் உள்ள நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி காவல்துறையினர் 50 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version