இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது – நீதிமன்றம் வேதனை!

புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடப்பது துரதிர்ஷ்டவசமானது என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

அப்போது, திருப்பூரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நியூஸ் ஜெ வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டிய வழக்கறிஞர் சூரியபிரகாசம், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாதிட்டார்.

இதனையடுத்து, உத்தரபிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை மேற்கோள்காட்டிய நீதிபதிகள், புனித பூமியாக கருதப்படும் இந்திய திருநாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்தனர். மேலும், திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை பிடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

Exit mobile version