இன்று 5-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி தொடரை வெல்லுமா?

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்று சம நிலையில் உள்ளன. கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த 10 ஆம் தேதி நடந்த 4 வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 359 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக எட்டியது. இரு அணிகளும் சம பலத்துடன் உள்ள நிலையில் இன்று 5-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

தொடரை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Exit mobile version