டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்னதாக டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் சென்ற பிரதமர் மோடி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்புகள் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் தேசிய கீதத்தினை இசைத்தனர். சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு விருந்தினர்கள், மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

டெல்லியில் உள்ள இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், பாதுகாப்பு படை வீரர்கள், காவலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறினார்.

Exit mobile version