காரைக்கால் மாவட்டத்தில் இரு சக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

காரைக்கால் மாவட்டத்தில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டத்தில், இரு சக்கர வாகன திருட்டு அதிகம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த, காரைக்கால் நகர காவல்துறையினர், காரைக்கால் கடற்கரை அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி, அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும், அதை திருடி வந்தது தெரியவந்தது. நேசம் பாபு என்கிற அப்துல் ரகுமான், தமீம் அன்சாரி மற்றும் அப்துல் ரகுமான் என்ற அந்த மூன்று பேரும், விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச் சேரியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்பவரின் உதவியுடன் மூன்று பேரும் வாகன திருட்டில் ஈடுபட்டதாகவும் ஒப்புக் கொண்டனர். தற்போது மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 4 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Exit mobile version