வாடகை அளிக்காத மூதாட்டியை குப்பை கிடங்கு அருகே விட்டு சென்ற உரிமையாளர்

குமாரபாளையத்தில் வீட்டு வாடகை அளிக்காத மூதாட்டியை, வீட்டின் உரிமையாளர் குப்பை கிடங்கு அருகே விட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் வசிக்கும் லட்சுமி என்கிற மூதாட்டி, தனியாக வீடு ஒன்றை எடுத்து விசைத்தறி தொழில் செய்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடந்த அவர், வீட்டு வாடகை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் மூதாட்டி லட்சுமியை மருத்துமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, காவேரி நகர் பாலத்திற்கு அருகில் உள்ள குப்பை கிடங்கு அருகில் விட்டுச் சென்றுவிட்டார்.

கடந்த மூன்று நாட்களாக உணவின்றி தவித்த மூதாட்டியை, கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து,  திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் உடனடியாக தனியார் தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, மூதாட்டிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கி, தருமபுரியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தார். காவல்துறை அதிகாரிகளின் இந்த செயலை பொதுமக்களை வெகுவாக பாராட்டினர்.

Exit mobile version