பெற்ற பிள்ளைகள் தவிக்க விட்டு சென்ற 85 வயது மூதாட்டி

11 குழந்தைகளை பெற்ற தாய், தற்போது கேட்பாரற்று அநாதையாக இருப்பது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில் உள்ள முண்டக்கால் பகுதியில் வசித்து வரும் 85 வயதான கோலம்மாளுக்கு பிறந்த 11 பிள்ளைகளில் 4 பேர் இறந்து விட்ட நிலையில் தற்போது 4 மகள்களும் 3 மகன்களும் உள்ளனர். இவரது கணவர் 40 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார்.

பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி வசதியாக வாழ்ந்து வரும் நிலையில், கோலம்மாள் மட்டும் தனித்துவிடப்பட்டுள்ளார். நோய்வாய்பட்டு உடல்நலம் மோசமாக உள்ள கோலம்மாளின் நிலை குறித்து அவரது மகன் ஒருவரிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து கோலம்மாளை சில நாட்கள் கவனித்துக்கொண்ட மகன், கோலம்மாள் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

உணவு வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற மகன் திரும்பி வரவில்லை என்று கண்ணீருடன் கூறும் கோலம்மாள், பெற்ற பிள்ளைகள் இப்படி செய்யும் என தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வயதான தாயை தனியாக தவிக்கவிட்டு சென்ற அவரது பிள்ளைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version