எரிந்த குடிசைக்குள் எந்த காயமுமின்றி உயிருடன் இருந்த மூதாட்டி

சென்னை நுங்கம்பாக்கத்தில், தீ விபத்தில் 9 குடிசைகள் எரிந்து சேதமானதில், முழுவதும் எரிந்த குடிசைக்குள் மூதாட்டி ஒருவர் எந்த காயமும் இல்லாமல் உயிருடன் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள குடிசை வீடுகள் திடீரென தீ பற்றி எரிவதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 9 குடிசைகள் எரிந்து நாசமாகின.

தீ முழுவதும் அணைக்கப்பட்டதையடுத்து, உடல் முழுவதும் நனைந்தபடி எரிந்த வீட்டின் மூலையில் மூதாட்டி ஒருவர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முழுவதும் எரிந்த வீட்டிற்குள் மூதாட்டி ஒருவர் சிறு காயங்கள் கூட இல்லாமல் உயிருடன் இருந்தது அந்த பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

Exit mobile version