குடியரசு தலைவரின் அதிகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கருணை மனுக்களை பரிசீலித்து தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கும் போது சம்பந்தப்பட்ட குற்றவாளி, வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் ஒன்றில் ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக்மீரான் என்ற மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அவர்களின் கருணை மனுக்களை தமிழக ஆளுநர் நிராகரித்ததை அடுத்து குடியரசு தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம் எந்தவித தண்டனை குறைப்பும் இல்லாமல் ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆயுள் தண்டனையை குறைக்க கோரி மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் போது, ஆயுள் முழுக்க தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version