பண்ருட்டி தொழிலதிபர் கடத்தல்-ரூ.50,000 கொள்ளை: மர்ம கும்பல் கைது

பண்ருட்டியில் பிரபல தொழிலதிபரை பணம் கேட்டு கடத்தியதை தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜயரங்கன் என்பரை பணம் கேட்டு மர்ம நபர்கள் கடந்த 2018ல் கடத்தினர். அதைத்தொடர்ந்து செல்போனில் பேசிய மர்ம நபர்கள் 80 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், மாயவேல் என்பவர் விஜயரங்கனிடம் வியாபாரம் தொடர்பாக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்று பணத்தை எடுத்துக்கொண்டு பாதி வழியில் இறக்கி விட்டுள்ளனர். இதுதொடர்பாக மாயவேல் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விஜயரங்கனிடமும் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து கத்தி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் வாகனத்தையும் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றியதுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version