அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அமோக வெற்றி

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 97 ஆயிரத்து 561 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அமோக வெற்றி பெற்றார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின்னர், ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழிநடத்தினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்து வந்தார்.

தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத் குமாரை, பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளிய அவர், ஒவ்வொரு சுற்றிலும் எடப்பாடி மக்கள் மனதில் உள்ள தனது ஆளுமையை நிரூபித்தார்.

எடப்பாடி தொகுதியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் சம்பத்குமார் 69 ஆயிரத்து 352 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை விட 93 ஆயிரத்து 602 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அதிமுக முதன்மை முகவரான வழக்கறிஞர் தங்கமணி பெற்றுக்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் சேலம் மாவட்ட மக்களின் மனதில் விவசாயியான எடப்பாடி பழனிசாமி தனியிடத்தை பிடித்துள்ளார்.

மேலும் சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என்பது நிரூபணமாகியுள்ளது.

Exit mobile version