தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது மூதாட்டி மற்றும் துபாயிலிருந்து வந்த 43 வயது நபருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் தனிவார்டுகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்களில் கலிபோர்னியாவிலிருந்து வந்தவர் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், துபாயிலிருந்து வந்தவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.