தென்சென்னை காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் இடைநீக்கம்

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவராக கராத்தே தியாகராஜன் இருந்து வந்தார். இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தயவால்தான் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டுப் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கராத்தே தியாகராஜனின் இத்தகைய கருத்துக்களால் திமுக -காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதிய கட்சித் தலைமை கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Exit mobile version