நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள்: சீனா

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் என ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது.

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதா இடைக்காலமாக ரத்து செய்யப்பட்டபோதும், அதை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் நெருப்புடன் விளையாடுபவர்களுக்கு அதிலேயே தான் அழிவு என கலகக்காரர்களை சீன அரசின் ஹாங்காங் மற்றும் மக்கவ் விவகாரத்துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது. சூழலை தவறாக கணித்து, அரசு கட்டுப்பாட்டோடு இருப்பதை பலவீனம் எனக் கருதி தப்புக்கணக்கு போட வேண்டாம் என்று போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது.

முன்னதாக ஹாங்காங்கில் வன்முறையை தூண்டிவிட்டு, சீனாவின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக சீனா கூறியிருந்தது. இதேபோல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஹாங்காங் போலீசாருக்கு எதிர்காலத்தில் ஆயுதங்கள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டனர். ஹாங்காங்கில் மக்கள் மீது அதிக படையை சீனா பயன்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version