உயர் கல்வியில் தமிழகம் நாட்டில் முதலிடம் : முதலமைச்சர்

செஞ்சியில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தால், உயர் கல்வியில் தமிழகம் நாட்டில் முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார். மாணவர்களின் எதிர்கால நலனுக்கான திட்டங்களையும், பெண்கள் பாதுகாப்பு, கர்ப்பிணி தாய்மார்கள் நலனுக்கான திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

திண்டிவனத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களின் குரல் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்ததாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தமிழக நலனுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் பெறுவார்கள் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

Exit mobile version