கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கவலை

கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடுக்கி மற்றும் முல்லைப்பெரியாறு அணை உள்பட மொத்தம் 33 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ரயில்களை மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் கடுமையான சேதத்தை கேரளா சந்தித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் கவலை தெரிவித்துள்ளார். வெள்ள சேத நிலவரத்தைத் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தி உள்ள மாநில அரசு கூடுதலாக நிவாரண நிதி ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளையில், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Exit mobile version