சத்தீஸ்கரில் நக்சல் அச்சுறுத்தல் பிறகும் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு- தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு

சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்பு இருந்தும் வாக்காளர்கள் அதிக ஆர்வம் காட்டியது பாராட்டுக்குரியது என, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. நக்சல்கள் பாதிப்பு அதிகமாக இருந்த 18 தொகுதிகளுக்கு மட்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்காளர்களின் விரல்களில் மை இருந்தால் அவர்களின் விரல்கள் வெட்டப்படும் என நக்சல்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனாலும் சத்தீஸ்கரில் மொத்தம் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது என்றும், மக்கள் மத்தியில் அச்சம் இருந்தும், வாக்களிக்க ஆர்வம் காட்டியது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version