மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியீடு: பாக். பாடகி மீது வழக்குப்பதிவு

வீட்டில் பாம்புகள், முதலைகளை காண்பித்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் பாடகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகி ரபி பிர்சாடா. இவர் கடந்த 5ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் முதலைகள், பாம்புகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் இந்த பாம்புகள், முதலைகளை மோடிக்கு அனுப்புவதாகவும் அவை, மோடியை கவனித்துக்கொள்ளும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி வனத்துறை, ரபி சட்டவிரோதமாக வன விலங்குகளை வீட்டில் வைத்திருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து நீதிமன்றமும் ரபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version