பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து: நியூஸ் ஜெ செய்தியாளர் உள்பட 3 பேர் பலி

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

சேலையூர் திருமங்கை மண்ணன் தெருவை சேர்ந்த பிரசன்னா, அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோருடன் வசித்து வந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் பிரசன்னாவின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. வீட்டின் உள்ளே கரும்புகை இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பிரசன்னா அவரது மனைவி மற்றும் தாயார் ஆகியோர் சடலமாக கிடந்தனர். வீட்டிலிருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி கிடந்தது. அதிலிருந்து கேஸ் கசிந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மூன்று பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், மூன்று பேரின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த பிரசன்னா, நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தியாளராக சிறப்பாக பணியாற்றி வந்தார். பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் மறைவுக்கு நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றனர்.

Exit mobile version