கேரளாவில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக : பினராயி விஜயன்

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு காவல் துறைக்கு உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார்.

இதனை முன்னிறுத்தி மாநிலத்தில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 7 முறை கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றதாகவும் அவர் கூறினார். இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசிப்பதற்கு பக்தர்களே உதவி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பாஜக முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். ஐயப்பனை தரிசனம் செய்ததற்காக கோயில் நடை அடைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version