அதிமுக வேட்பாளர்கள் கவனத்திற்கு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பை தவிர்ப்பதற்கு, அண்ணா திமுக வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை தற்போது பார்க்கலாம்.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது, பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள், சட்டத்திற்கு புறம்பாக நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதை தவிர்க்க அதிமுக வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்.

வேட்பாளராக போட்டியிடுபவருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருந்தால் அதில் ஒன்றை ரத்து செய்து விடும்படி சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்துவிட்டு அதற்கான ஒப்புகை சீட்டு பெற்று வைத்துக் கொண்டு தேர்தல் அதிகாரியிடம் மனு பரிசீலனையின் போது அளித்தால் தங்களது வேட்பு மனுவை நிராகரிக்க முடியாது.

கூட்டுறவு சங்கங்களில் பதவி வகிப்பதை காரணமாக சொல்லி வேட்புமனுவை நிராகரிக்க முடியாது.

வழக்குகள் நிலுவையில் இருப்பின் பிரமாண பத்திரத்தில் அதற்கான விபரங்களை முழுமையாக தெரிவித்தால் போதுமானது. வழக்குகள் ஏதும் இல்லாதவர்கள் காவல்துறையினரிடம் சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என தேர்தல் அலுவலர் வேட்பாளர்களை வலியுறுத்த முடியாது.

ஊரக உள்ளாட்சிகளில் தான் பதவி ஏதும் வகிக்கவில்லை என தனி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி வேட்பாளர்களை தேர்தல் அலுவலர் வலியுறுத்த முடியாது.

புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் புதிய வார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிக்கு கூடுதல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனையும் கேட்டு பெற்றுக் கொள்வது நல்லது.

Exit mobile version