கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரிடம் குவியும் உதவிகள்

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க பல்வேறு தரப்பினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கூட்டுறவு வங்கிகளின் சார்பில், 6 கோடி ரூபாய்க்கான வரைவோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். சாய் பல்கலைக்கழக நிறுவனர் ரமணி ஒரு கோடி ரூபாயும், சவீதா பல்கலைக் கழக வேந்தர் வீரையன் ஒரு கோடியும் நிவாரண நிதியாக வழங்கினர்.

அழகப்பா பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜேந்திரன், 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நாகூர் தர்கா சார்பில் அதன் நிர்வாகி அலாவுதின் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சரிடம் நிவாரண நிதியாக வழங்கினர்.

திருவாவடுதுறை ஆதினம் சார்பில், அதன் நிர்வாகி சுந்தரமூர்த்தி சுவாமிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

 

Exit mobile version