ஆயுத பூஜை திருநாள் வாழ்த்து: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், கொண்டாடப்படும் ஆயுத பூஜை திருநாளில், தொழில், கல்வி ஆகியவற்றில் தமிழக மக்கள் சீரோடும் சிறப்போடும் விளங்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நவராத்திரியின் 9 ஆம் நாளில் ஆயுத பூஜை, 10 ஆம் நாளில் விஜயதசமியை கொண்டாடும் தமிழக மக்களுக்கு திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துணிவை தரும் மலைமகளையும், அடுத்த 3 நாட்கள் செல்வத்தை வழங்கும் திருமகளையும், இறுதி 3 நாட்கள் கல்வியை அருளும் கலைமகளையும் வணங்குவது சிறப்பம்சம் என குறிப்பிட்டுள்ள முதலைமைச்சர், உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும், தொழில் கருவிகளை இறை பொருட்களாக பாவித்து, தொழில் வளம் பெருக வழிபடும் திருநாளே ஆயுத பூஜை திருநாள் என கூறியுள்ளார். விஜயதசமி திருநாளில் தொடங்கப்படும் நற்காரியங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், இறைவனை வணங்கி கல்வி, கலை, தொழில் ஆகியவற்றை தொடங்கி விஜய தசமி திருநாளை மக்கள் கொண்டாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சிறப்புமிக்க ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version