“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”

அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள செவன்த் டே மழலையர் பள்ளியில், குடும்பத்தினருடன் சென்று வாக்களித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சுகுனாபுரத்தில் உள்ள பள்ளியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவை அளித்ததாக தெரிவித்தார். மக்களின் எழுச்சியைப் பார்க்கும் போது அதிமுக மீண்டும் மகத்தான வெற்றி பெற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைப்பது உறுதி என தெரிவித்தார்.

 

நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், அமைச்சர் தங்கமணி, தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனக் கூறினார

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

 

Exit mobile version