ஜாக்டோ ஜியோ போராட்டம் : மாணவரின் மனு விசாரணைக்கு ஏற்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர் தொடர்ந்துள்ள வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு தடை கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்ற 11ம் வகுப்பு மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் வரும் மார்ச் மாதம் தங்களுக்கு பொதுத்தேர்வு வர உள்ள சமயத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பொதுத்தேர்விற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிய மாணவர், உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு முறையிட்டார்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version