கோவையில் காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு

கோவையில் நேற்று காணாமல் போன 7 வயது சிறுமி வீட்டினருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துடியலூர் அடுத்த பன்னிமடையில் நேற்று மாலை தனது 7 வயது பெண் குழந்தை காணாமல் போனதாக துப்புறவு தொழிலாளரான பிரியா என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். புகாரையேற்ற காவல்துறையினர் நேற்று மாலை முதல் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் பன்னிமடையில் ஒரு வீட்டின் அருகே முகத்தில் துணி சுற்றிய நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது, காணாமல் போன சிறுமி என்பது தெரியவந்தது. குழந்தையின் முகம் மற்றும் உடல் பகுதியில் காயங்கள் இருந்ததால் தடய அறிவியல் துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

மீட்கப்பட்ட குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version