மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது – முதலமைச்சர் பழனிசாமி

மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டார்.

நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு 4,415 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். 

உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை உடனே விடுவிக்க வேண்டும். அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரத்தில் உதான் திட்டத்தின்கீழ் விமான சேவையை தொடங்க வேண்டும்.

குமரியில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று உறுதி அளித்தார்.

நிதி ஆதாரத்தை பெருக்கிய பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version