திருப்பதிக்கு இணையாக கட்டப்பட்டு வரும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்

திருப்பதியைப் போலவே தெலங்கானாவிலும், சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், லக்ஷ்மி நரசிம்மர் கோயில் ஒன்று மலை மீது உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலத்திலிருந்து, தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோது, தலைநகர் ஹைதராபாத் தெலுங்கானாவோடு இணைக்கப்பட்டது, ஆனாலும், திருப்பதி, ஸ்ரீசைலம், காளஹஸ்தி உள்ளிட்ட பல புகழ் பெற்ற, செல்வ வளம் மிகுந்த கோவில்கள் ஆந்திரா மாநிலத்திலேயே நீடித்தன.

எனவே, தெலுங்கானாவிலும் புகழ்பெற்ற ஆன்மீக தளங்களை உருவாக்கும் நோக்கத்தில் 2014 ஆம் ஆண்டே, யாதகிரிகுட்டாபில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தை மேம்படுத்த உத்தரவிட்டார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ்.

இதனையடுத்து, புவனா யாதகிரி மாவட்டத்தில் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் தெலுங்கானாவின் திருப்பதியாக உருவாகி வருகிறது இந்த குகைக்கோவில்.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சேதமடையாத வகையில் கிரானைட் கற்கள் ஆந்திராவின் குருஜாப்பள்ளி கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் வளாகம் தயாராகி வருகிறது.

தெலுங்கு திரைப்பட கலை இயக்குனர் ஆனந்த் சாய் இந்தக் கோவிலுக்கான கட்டுமான திட்டத்தை வடிவமைத்திருக்கிறார். மேலும், இக்கோயிலுக்கான சிற்பங்களை உருவாகும் பணிகளில் மகாபலிபுரத்தை சேர்ந்த சுமார் 500 சிற்பிகள் ஈடுபட்டு வருவதோடு, ஆகமவிதிப்படி பல்வேறு கலைச் சிற்பங்களையும் வடிவமைத்து வருகின்றனர்.

திருப்பதியைப் போன்றே மலைப்பகுதியில் இக்கோயில் அமைந்திருப்பதால், இங்கும் ஏழு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த தெலுங்கானா திருப்பதிக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லவதற்கு ஏற்ற வகையில், சிறப்பு சாலை வசதிகள் மற்றும் ரயில் வசதிகளும் ஏற்பாடாகி வருகிறது.

40 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த அத்திவரதரைக் காண்பதற்கு திருப்பதியைவிட பக்தர்கள் கூட்டம் அலைமோதியதைப் போல, அடுத்த ஆண்டு இந்தக் லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பணிகள் முடிவடைந்தபிறகு, தெலுங்கானாவின் திருப்பதிக்கும் பக்தர்கள் அதிகளவில் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version