காவிரியில் விநாடிக்கு 32,660 கனஅடி நீர் திறப்பு

கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால், தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்பாண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இந்தநிலையில், கர்நாடகாவில் மழையளவு குறைந்ததையடுத்து, அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் முற்றிலுமாக குறைப்பட்டது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை முதல் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடகா அதிகரித்துள்ளது. இதன்படி, காவிரியில் விநாடிக்கு 32 ஆயிரத்து 660 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 17 ஆயிரம் கனஅடியில் இருந்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 17 ஆயிரம் கனஅடியில் இருந்து 21 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மேட்டூருக்கு வரும் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியில் இருந்து 20 ஆயிரத்து 742 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து, 20 ஆயிரத்து 800 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 4 ஏழு டி.எம்.சி.யாகவும் உள்ளது.

Exit mobile version