கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு – தட்டிக் கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொடுமை!

 

சென்னையில் மனைவியை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்
சென்னை திருவிக நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ரயில்வேயில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்

இவரது மனைவி கல்பனா இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. ஐந்து மற்றும் ஏழு வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த 11ஆம் தேதி கல்பனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சுரேஷ் திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

 இதையடுத்து போலீசார் கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் கல்பனா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.  

இதையடுத்து திருவிக நகர் போலீசார் சுரேஷை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மனைவி கல்பனாவை பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.  சுரேஷுக்கு  கடந்த 2 மாத காலமாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக  கல்பனா சந்தேகித்துள்ளார்.  

 இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.  சம்பவம் நடைபெற்ற அன்றும் இதே போல் மோதல் வெடித்துள்ளது.  இந்நிலையில் தான் சுரேஷ் தனது மனைவியின்  கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். சுரேஷின் வாக்குமூலத்தையடுத்து அவரை   திருவிக நகர் போலீசார்  கைது செய்தனர். மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடிய சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

Exit mobile version