கணவனை கொல்ல நூதன திட்டம் – கடற்கரையில் நடந்த கொடூர நாடகம் அம்பலம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

கதிரவன் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 11 மணியவில் இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்துள்ளனர்.

கதிரவனின் மனைவி அனிதாவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இருவரும் கடற்கரையில் கண்ணை கட்டிக்கொண்டு விளையாடி கொண்டிருந்தபோது, கதிரவனின் பின்புறம் இருந்து மர்ம நபர் ஒருவர் சுத்தியால் கதிரவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

பின்னர்  அனிதாவிடம் இருந்து நகை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு, அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அனிதா எழுப்பிய கூச்சல் சத்தம் கேட்டு திருவான்மியூர் குப்பத்தை சேர்ந்த இருவர் அப்பகுதிக்கு வந்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார் கதிரவன்.

சம்பவ இடத்தில இருந்த கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்த திருவான்மியூர் போலீசார், அனிதாவிடம் விசாரணையை தொடங்கினர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, விசாரணையை துரிதபடுத்திய போலீசாரிடம் அனிதா குற்றம் புரிந்ததை ஒப்புகொண்டார்.

விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்தோனி ஜெகன் என்பவரை திருமணத்திற்கு முன்பிருந்தே காதலித்து வந்ததாகவும், திருமணம் பிடிக்காத காரணத்தினால் காதலன் உதவியுடன் கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார்.

தனது திட்டத்தின்படி ஆள் நாடமாட்டம் குறைவாக உள்ள திருவான்மியூர் கடற்கரைக்கு கணவர் கதிரவனை அழைத்து சென்றதாக அனிதா கூறினார்.

அனிதாவின் காதலன் அந்தோனி ஜெகன் மதுரை காமராஜர் பல்கலை.யில் எம்.ஏ. படித்து வந்துள்ளார்.

கதிரவனை கொலை செய்வதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்து, மீண்டும் மதுரைக்கு சென்ற அந்தோனி ஜெகனை, அவரது செல்போன் சிக்னலை கொண்டு கல்லூரி ஹாஸ்டலில் போலீசார் கைது செய்தனர். அனிதாவை கைது செய்த போலீசார் 394- பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Exit mobile version