இயக்கமெல்லாம் இல்லை, ஆளைவிடுங்க – அழகிரி

பேரவையும் இல்லை, பாசறையும் இல்லை, ஆளை விடுங்கள் என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் இணைய அழகிரி விரும்பினார். ஆனால் ஸ்டாலின் தரப்பிடம் இருந்து பச்சை சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தி ஒன்றரை லட்சம் பேரை கூட்டி பலத்தை காட்டப்போவதாகக் கூறினார் அழகிரி. ஆனால் நடந்ததோ தலைகீழ். சுமார் ஆறாயிரம் பேர்தான் பேரணியில் கலந்துகொண்டனர். இதனால் அழகிரி படு அப்செட்டாக இருக்கும் நிலையில், அவரது ஆதரவாளர் இசக்கிமுத்து, அழகிரி புது இயக்கம் ஆரம்பிக்க இருப்பதாக கூறினார். கருணாநிதி எழுச்சிப் பேரவை அல்லது கருணாநிதி எழுச்சிப் பாசறை என அதற்கு பெயர்சூட்டப்படும் என கூறப்பட்டது. இது என்ன புதுதலைவலி என ஸ்டாலின் யோசிக்க, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, இசக்கிமுத்து சொன்னது அவரது சொந்தக் கருத்து என கூறிவிட்டார். திமுக-வில் ஏன் உங்களை சேர்க்கவில்லை என கேட்டபோது, அவர்களிடம் கேளுங்கள் என பதிலளித்துவிட்டு சென்றார் அழகிரி. குடும்ப உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் கொடுத்தும், அழகிரியால் எந்தப் பயனும் இல்லை, அவரை கட்சியில் சேர்க்க முடியாது என தெளிவாகக் கூறிவிட்டாராம் ஸ்டாலின்.

Exit mobile version