பூச்சி மருந்துடன் செய்யப்பட்ட போண்டா சாப்பிட்ட இளம் பெண் பலி!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தவறுதலாக பூச்சி மருந்துடன் செய்யப்பட்ட போண்டா சாப்பிட்ட இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் செடிகளுக்கான பூச்சி மருந்து மற்றும் போண்டா மாவு ஆகியவற்றை ஒன்றாக வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதை வாங்கிய பெரியசாமியின் மனைவியான லட்சுமி, பூச்சி மருந்து மற்றும் போண்டா மாவு ஆகியவற்றை கலந்து போண்டா செய்துள்ளார். அதனை அறியாமல் குடும்பத்தினர் அனைவரும் போண்டாவை உட்கொண்டுள்ளனர். இந்நிலையில் தவறுதலாக பூச்சி மருத்தையும் கலந்து  போண்டா சுடப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்த பெரியசாமியின் மகன் சுகுமார் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். எனினும் மருத்துவமனையில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் சற்று நேரத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் சென்னை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பெரியசாமி மருமகள் பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவனக் குறைவால் பூச்சி மருந்தை சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version