ஒருதலைக் காதலால் நிகழ்ந்த விபரீதம் – கண்ணாடியால் கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!

இளம்பெண்ணிடம் நட்பாக பழகி வந்த பட்டதாரி இளைஞர், ஒருதலைக் காதலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சென்னையில் அரங்கேறியுள்ளது.. திருமணம் செய்ய வற்புறுத்தியும், இளம்பெண் ஒப்புக்கொள்ளாததால், இந்த கொடுமையான முடிவு எடுத்துள்ளார் அந்த இளைஞர்.

சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் பார்கவி, கோவையில் வேளாண் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த வருடம் குஜராத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவிற்கு சென்ற போது, தோட்டக்கலை பட்டதாரியான அரியலூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

பார்த்த கனத்தில் இருந்து பார்கவியுடன் நண்பராக பழகி வந்த ஜீவானந்தத்திற்கு, ஒருகட்டத்தில் பார்கவி மீது காதல் அரும்பியுள்ளது. பணி விஷயமாக சென்னைக்கு வந்த ஜீவானந்தம், பார்கவியின் வீட்டில் தங்கியுள்ளார். நான்கு நாட்கள் அவர் அங்கேயே தங்க, அது குறித்து மகளிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். இதையே ஜீவானந்தத்திடம் பார்கவி கேட்க, அப்போது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், நான் உன்னை காதலிக்கிறேன், நீ என்னை தான் திருமணம் செய்ய வேண்டும் என ஜீவானந்தம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கேட்டவுடன், ஜீவானந்த்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பார்கவி. அன்று இரவே யாரும் எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது. ஆத்திரத்தில் இருந்த ஜீவானந்தம், அதிகாலை 3 மணிக்கு திடீரென எழுந்து, வீட்டு சமயலறையில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு, தீ பற்றவைத்ததாக கூறப்படுகிறது. சிலிண்டரில் கேஸ் குறைவாக இருந்ததால், அவர் நினைத்தது நடக்கவில்லை. இதனிடையே, சுதாரித்துக் கொண்டு தீயை அணைத்த பார்கவியின் பெற்றோர், ஜீவானந்தத்தை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

இதனால், மேலும் விரக்தியடைந்த ஜீவானந்தம், அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக, பார்கவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, இளம்பெண் வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

Exit mobile version