உலக காற்று தினம் இன்று !!1

நமது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பயன்படும் உன்னதம் வாய்ந்த ஒன்றுதான் காற்று. அத்தகைய காற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. 

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் ஜூன் 15ம் நாள் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையம் மற்றும் உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் இணைந்து உருவாக்கிய இந்நாள், காற்றின் ஆற்றலைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் காற்றின் முக்கியத்துவம் குறித்து நமக்கு உணர்த்துகிறது. மனித நாகரீகம் வளர வளர இயற்கை சீர்கேடு அடைந்து வருகிறது. உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று எனினும், சில நேரங்களில் இந்த காற்று தனி உருவெடுத்து தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதித காற்று புயலாக மாறினால் ஆபத்து ஆதிக்கம் செய்யும் என்பதை நாம் மறக்க இயலாது.

சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை அமைச்சகம் சார்பில் 2014ல் காற்று தர குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமது சுற்றுப்புற காற்றின் தரத்தினை எளிதில் அறியும் வண்ணம் ‘ஒரே எண் – ஒரே நிறம் – ஒரே விளக்கம்’ என வரையறுக்கப்பட்டது. மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நாடு முழுவதும் 240 நகரங்களில் தேசிய காற்று கண்காணிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. சென்னையில் காற்று தர கண்காணிப்பு மையம் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக காற்றின் தரத்தை கண்காணித்து வருகின்றது. இதற்கான முழுவிவரங்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் தொடர்ந்து கொடுக்கப்பட்ட்டு வருகின்றது.

2012ல் உலகின் 132 நாடுகளில் மிக குறைந்த காற்று தரம் கொண்ட நாடாக இந்தியா மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசுபட்டுள்ள நகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு. இதனை கருத்தில் கொண்டு வருடம் முழுவதும் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அனைத்தையும், அவர் அவர் கடைபிடித்தால் மட்டுமே எதிர் வரும் சமூதாயம் நல்ல காற்றினை சுவாசிக்க முடியும் என்பதை நாம் மனதில் கொண்டு இனி வரும் நாட்களில் காற்றை மாசு படுத்த மாட்டோம் என உறுதியேற்போம்.

Exit mobile version