அடிதடி தொடங்கி ஆள்மாறாட்டம் வரை..! குழப்பத்தின் பெயர்தான் பாலமேடு ஜல்லிக்கட்டா..?

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, அடிதடி, ஆள்மாறாட்டம், போலீஸ் தடியடி என பல குளறுபடிகளுடனும், தொற்று பரவும் அபாயத்துடனும் நடந்து முடிந்துள்ளது. அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம்.

தைத்திங்கள் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டில், பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை 7 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 704 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

150 பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதி என்ற அரசாணை பெயரளவில் மட்டுமே இருந்ததை பாலமேட்டில் கூடிய கூட்டம் உணர்த்தியது.

வெளி மாவட்ட மக்கள், வெளி மாநில சுற்றுலா பயணிகள், அயல்நாட்டினர் எவரும் வரக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் வாடிவாசல் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. வீடுகளிலும் மக்கள் குழுமியது சமூக இடைவெளி என்பது கிலோ என்ன விலை என்று கேட்பதுபோலவே இருந்தது.

அது ஒருபுறம் இருக்க ஜல்லிக்கட்டு போட்டியில், தான் வளர்த்த காளையை, மாடுபிடி வீரன் பிடித்து விட்டானே என்ற ஆதங்கத்தில் மாடுபிடி வீரரை காளை உரிமையாளர் தாக்க அங்கே ஒரு கைகலப்பு தனியாக அரங்கேறி கொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போலீசார் பொதுமக்களை நோக்கி தங்கள் லத்திகளைச் சுழற்ற தொடங்கினர். தகராறை விலக்குகிறோம், கூட்டத்தை கலைக்கிறோம் என்ற பெயரில் போலீசார், தாக்கியதில் அப்பாவி காளை உரிமையாளர் ஒருவரின் மண்டை உடைந்து மயக்கமாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.

காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காவல்துறையினர் என ஆளாளுக்கு களமாடிக் கொண்டிருக்க, அங்கே ஆள்மாறாட்டமும் சர்வசாதாரணமாக அரங்கேறியது.

காளை உரிமையாளர்களே மாடுபிடி வீரர்களின் பெயரிலான டீசர்ட் அணிந்து களமாடியதும், வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டவர்களின் டீசர்ட் அணிந்து மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். ஒரு வழியாக பதிவை வைத்து ஆள்மாறாட்ட வீரர்கள் இருவரைக் கண்டறிந்த அதிகாரிகள் அவர்களை வெளியேற்றினர்.

இதனிடையே காளைகளை வாடிவாசலில் இருந்து அனுப்புவதிலும் தகராறு ஏற்பட்டது. இதில், உள்ளூரைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர்கள், வெளியூர் மாட்டுக்காரர்களை விரட்டியதும் பரபரப்பாகியது. பெரிய கம்பு ஒன்றை எடுத்து மாட்டு உரிமையாளர்களை தாக்கிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

இப்படி குழப்பத்துடன் போட்டி நடந்து கொண்டிருக்க பரிசு அறிவிப்பதிலும் பெரும் குழப்பம் நிகழ்ந்தது. சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், இல்லை…. இல்லை… அது பிடிபடாத மாட்டுக்குத்தான் என்று அந்தர் பல்டி அடித்தனர் நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள்.

குளறுபடிகளின் மொத்த உருவமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிட்டை போல், இனி நடந்து விடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version