உலகத் தரம் வாய்ந்த மெரினா கடற்கரையாக மாற்ற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத் தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு சென்னை மாநகராட்சிக்கு முழு சுதந்திரம் வழங்குவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், உள்வட்ட சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். பின்னர் மீன் கடைகளை ஒழங்குபடுத்தி மீன் சந்தைக்கு மாற்றப்படும் எனவும் அவர் கூறினார்.

அப்போது, மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத் தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு சென்னை மாநகராட்சிக்கு முழு சுதந்திரம் வழங்குவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கடற்கரை உள்வட்ட சாலையில் உள்ள கடைகள் மெரினா கடற்கரையின் அழகை மறைப்பதால், அவற்றை கடற்கரை நோக்கியபடி அமைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றவில்லை என்றால், கடற்கரையில் உள்ள உணவு கடைகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பது குறித்து வரும் 13ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version