படிக்காதவன் திரைப்பட பாணியில் கர்ப்பிணி வேடமணிந்து கஞ்சா விற்பனை செய்த பெண்கள்!

மதுரை சமயநல்லூரில் கள்ளகாதலனுக்காக கர்ப்பிணி போல் வேடமணிந்து வயிற்றில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த இரு பெண்கள் மற்றும் அவர்களுக்கு மூளையாக செயல்பட்ட கள்ளகாதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

படிக்காதவன் திரைப்படைத்தில் அம்பிகா கர்பிணி போல் வேடமிட்டு, வயிற்றில் கள்ளசாராயத்தை கட்டி அதை விற்பனை செய்வார்.

இதே போல் ஒரு சம்பவம் மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் அரங்கேறியுள்ளது…

சமயநல்லூர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்பிணிகள் இருவர் பர்தா அணிந்தபடி அடிக்கடி அங்கும், இங்கும் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்துள்ளனர்.

இதை வெகு நாட்களாக கண்காணித்து வந்த போலீசார், அவர்கள் மீது சந்தேகமடைந்து இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், இரு பெண்களும் கர்பிணி போல் வேடமிட்டு வயிற்றில் கஞ்சாவை பதுக்கி அப்பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த சமயநல்லூர் மகளிர் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்டவர்கள் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராணி மற்றும் தமிழ்செல்வி என்பது தெரியவந்தது.

இருவருக்கும் திருமணமான நிலையில் மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருடன் இருவருமே கள்ளத்தொடர்பில் இருந்துவந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கள்ளகாதலனான செல்வம்தான் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, இரு பெண்களிடம் கொடுத்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கர்பிணி போல் வேடமிட்டு விற்பனை செய்ததாக வாக்குமுலம் கொடுத்தனர்.

இதையடுத்து இரு பெண்களின் கள்ளக்காதலன் செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version