பட்டாகத்தியுடன் சுற்றி திரிந்த இருவருக்கு 7 மாதங்கள் சிறை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சாலையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேருக்கு ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் பிரபு ஆகிய இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இருவரும் தேவகோட்டை கோட்டாட்சியரிடம் ஒரு
வருடத்திற்கான நன்னடத்தை ஆவணம் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இதை மீறி கடந்த 19 ஆம் தேதி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருவரும் கைகளில் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, நன்னடத்தை ஆவண நிபந்தனையை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் இருவரையும் 7 மாதங்கள் சிறையில் அடைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version