ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்து உள்ளது. ஆனால் ஜப்பான் ஒலிம்பிக் தொடர்பான பல புதிய கேள்விகள் தற்போது எழுந்துஉள்ளன. ஒலிம்பிக் உலகில் நடப்பது என்ன? என்பது குறித்து பார்ப்போம்..

இந்த ஆண்டுக்கான வசந்த கால ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் நடத்த, ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், உலகையே உலுக்கும் கொரோனா வைரஸ்சின் தாக்கம் ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுவதால், டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? – என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் சிலநாட்கள் முன்பு, ஒலிம்பிக் குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டிக் பவுண்ட், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்த இறுதி முடிவு மே மாதத்தில் எடுக்கப்படும் என்றும், சூழ்நிலைகளைப் பொருத்து ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைக்கவோ, இடத்தை மாற்றவோ திட்டங்கள் உள்ளதாகவும் கூறி இருந்தார்.

ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச், கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதுதான் தங்கள் நோக்கம் – என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

சில நாட்கள் முன்பு, ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டு அமைச்சர் செய்கோ ஹசிமோடோ, ஒலிம்பிக் கமிட்டியுடனான ஜப்பான் அரசின் ஒப்பந்தத்தில், 2020க்குள் போட்டியை நடத்த வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த நேரத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்குத் தள்ளி வைக்கலாம் என்று தனது பரிந்துரையை வெளியிட்டார். அமெரிக்க அதிபரின் இந்தப் பேச்சு விளையாட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் குறித்து முதன்முறையாக பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, கொரோனா வைரஸ்சினால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் கூட, டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி வரும் ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று கூறி உள்ளார்.

ஜப்பானிலும் கொரோனா நோய்த் தொற்று உள்ளது, 700க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடந்தால் அதில் பார்வையாளர்கள் பங்கேற்க முடியுமா? அனைத்து நாடுகளும் வீரர்களை அனுப்புமா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

Exit mobile version