ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது எனவும், இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இதே போல தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் காமராஜ் தனி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அ

தனடிப்படையில் கார்பன் பரிசோதனைக்கு மாதிரி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்பன் சோதனைக்காக புளோரிடாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு பொருட்களில், ஒரு பொருளின் வயது கிமு தொள்ளாயிரத்து 5 என்றும், மற்றொன்றின் வயது கிமு 791 என்றும் தெரியவந்துள்ளதாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதே போல் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 ஆண்டு பழமையானவை என தெரியவந்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version