யார் இந்த ரிஷி சுனக்! பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எப்படி?

இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனக்,  பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த ரிஷி சுனக் காண்போம் இந்தத் தொகுப்பில்….

இங்கிலாந்தில்  உள்துறைச் செயலாளராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித்துக்கு நிதித்துறையின் தலைமைப் பொறுப்பை கொடுத்தார் போரிஸ்ஜான்சன். ஆனால்,  கருவூலத்தில் ஜாவித்துக்கு உதவியாளராக இருந்த அத்தனை பேரையும் நீக்க உத்தரவிட்டார். இதற்கு ஜாவித் எதிர்ப்பு தெரிவிக்கவே, விவகாரம் பெரிதானது.

இறுதியாக பெயரளவில்  மட்டும் தன்னால்  தலைமைப் பொறுப்பில் இருக்க முடியாது என்று தனது பதவியை ஜாவித் ராஜினாமா செய்தார்  இந்த நிகழ்வு பிரிட்டன் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற குறுகிய காலத்தில், போரிஸின் இந்த நடவடிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் பதற்றம் அடையாத போரிஸ்  தனது பணியினை தொடர்ந்தார்

தற்போது, தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இதில இந்தியர்களான அலோக் சர்மா, ப்ரீத்தி படேல், ரிஷி சுனக் ஆகியோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி படேல் உள்துறை அமைச்சராகவும், அலோக் சர்மா தொழில்துறை அமைச்சராகவும், ரிஷி சுனக் நிதி அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வம்சாவளிகள் மூவரில், நிதி அமைச்சர் பொறுப்பேற்கவுள்ள ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார். மற்ற இருவரும் ஏற்கெனவே கேபினெட் அந்தஸ்துடன்கூடிய அமைச்சர் பதவி வகித்திருந்தாலும், ரிஷி சுனக்கிற்கு இதுவே முதல்முறை.  ரிஷி பிறந்ததே சவுத்தாம்ப்டன் நகரில்தான். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார் ரிஷி.

அடுத்ததாக, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது, நாராயணமூர்த்தியின் மகள் அக் ஷதாவை சந்தித்து 2009-ல் திருமணம் செய்துகொண்டார்.  தொழிலதிபராக அறியப்படும் ரிஷி சுனக்  இங்கிலாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை இந்தியர். காட்மாரான் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபடி, தன் மனவியுடன் இணைந்து ஒரு டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்திவந்தார். அதோடு, இங்கிலாந்தின் பிரதமர் தெரசா மே கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து தீவிரமாக கட்சிப் பணியாற்றிவந்தார்.

 26 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹாக் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்தார். அவர், 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் பதவி விலகியதுடன், ஒட்டுமொத்த அரசியலிலிருந்தும் ஓய்வுபெற்றார். அந்த இடத்துக்கான தேர்தல் 2015-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதில், ஏற்கெனவே கன்சர்வேட்டிவ் கட்சி செல்வாக்காக உள்ள நிலையில், அக்கட்சி சார்பாக ரிஷி சுனக் போட்டியிட்டு, மொத்தம் 27,744 வாக்குகளைப் பெற்று அபார வெற்றிபெற்றார்.

கடந்த முறை போரிஸ் ஜான்சன் பிரதமராக வந்தபோதும் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல தலைமைச் செயலராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. செயலாளர் பதவி என்றாலும் அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்கும் அதிகாரம் அவருக்கு இருந்தது. இதன்பின் டிசம்பரில் நடந்துமுடிந்த தேர்தலில் 26,086 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் இந்த முறை அவருக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராத திருப்பமாக ஜாவித் ராஜினாமா செய்ய, தற்போது நிதித்துறை அமைச்சர் அதிகாரம் ரிஷியைத் தேடி வந்துள்ளது. போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட்டை பெருமளவு ஆதரித்தவர் ரிஷி. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மட்டுமில்லை, போரிஸ் ஜான்சனின் நம்பிக்கைக்குரிய மனிதராக வலம்வருவதால்தான் தொடர்ந்து அவரது அரசில் ரிஷிக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியில் சுனக் ஒரு `ரைஸிங் ஸ்டார்’ என்று வர்ணிக்கப்படுகிறார். அதேநேரம், அவருக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. இங்கிலாந்தின் பட்ஜெட் தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் மட்டுமே உள்ளது.  சவால்களை சாதிப்பாரா ரிஷி பொறுத்திருந்து பார்ப்போம்…

Exit mobile version